search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை"

    • பொங்கல் திருநாள் இயற்கையை வாழ்த்தும் நாள்.
    • பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள்.

    மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியை மக்களுக்கு அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது,

    இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலை பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள். சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக் கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.
    • பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

    சென்னை:

    நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையானது கோலாகலமாக கொண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் தங்களது வாழ்த்து செய்தியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பௌஷ்பர்வ, லோரி ஆகிய விசேஷமான தினங்களில் உலகெங்கிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.

    இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • பால் பொங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கிறேன்.
    • உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. உங்களது மனங்களில் ஏற்படும் பூரிப்பு தான் எனது பூரிப்பு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள்-பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "ஆண்டுக்கோர் நாள், அருமை மிகு திருநாள் பொங்கல் புதுநாள்

    இதற்கு ஒப்பான விழா உலகில் எங்கும் இல்லை" என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா.

    களம் காண்பான் வீரன் என்றால்-நெற்களம் காண்பான் உழவன் மகன்.

    போர் மீது செல்லுதலே வீரன் வேலை-வைக்கோற்

    போர் மீது உறங்குதலே உழவன் வேலை.

    பகைவர் முடி பறித்தல் வீரன் நோக்கம்-நாற்று

    முடி பறித்தல் உழவன் நோக்கம்.

    உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு;

    வேற்றுமையோ ஒன்றே ஒன்று.

    உழவன் வாழ வைப்பான்; வீரன் சாக வைப்பான்' என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர். அத்தகைய ஒப்பற்ற விழா தான் பொங்கல் திருநாள்.

    இதுதான் தமிழர் பெருநாள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றார் வள்ளுவப் பெருந்தகை.

    உழவு என்பது தமிழர்களின் தொழிலாக இல்லாமல் பண்பாட்டு மரபாக இருந்தது. அதனால் தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வரும் திருவிழாவாக பொங்கல் இருக்கிறது. தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெரு நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    பொங்கல் திருநாள் மட்டுமல்ல எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்று சொல்லத்தக்க வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியும் சொல்லாத பல திட்டங்களைச் செய்து காட்டியும் சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி என்ற முதல் கையெழுத்தை இட்ட நான் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையும் வழங்கி வருகிறேன்.

    கொரோனா காலத்தில் அனைத்துக் குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கிய இந்த அரசு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது. பெரும் நிதிநெருக்கடிக்கு மத்தியிலும் பொங்கல் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கி கோடிக்கணக்கான மக்கள் மனதில் மகிழ்ச்சியை பொங்க வைத்துள்ளது திமுக அரசு.

    பால் பொங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கிறேன். உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. உங்களது மனங்களில் ஏற்படும் பூரிப்பு தான் எனது பூரிப்பு.

    அன்பு பொங்க, ஆசை பொங்க, இன்பம் பொங்க, ஈகை பொங்க, உண்மை பொங்க, ஊரே பொங்கட்டும். இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறப் போகும் ஆண்டு இது. அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர்.
    • ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வாரசந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளி வாரசந்தையில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பானை, கரும்பு, வாழை மரம், மாடுகளுக்கான கயிறுகள், மஞ்சள் குழை, வாழைபழம், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், மாடுகள் மீது பூச கூடிய வண்ண பொடிகள், கோலப்பொடிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், காய்கறிகளும் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    வாரசந்தையில் பொங்கல் விற்பனைக்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏரளமான வியாபாரிகள் பொருட்களுக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதனை வாங்க ஊத்தங்கரை, மத்தூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தருமபுரி மாவட்டத்தில் இருந்து இருமத்தூர், கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரசந்தையில் பொங்கல் பண்டிகை விற்பனை களை கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோன்று ஆடுகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.

    இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ.1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.

    • இந்த வருடம் பொங்கல் திருநாளுக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4.34 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.
    • கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.

    சென்னை:

    அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் மொத்தமாக 20,084 இயக்கப்படுகிறது. இவற்றில் நகரப் பேருந்துகள் மட்டும் 9,620 ஆகும். மாவட்ட தடப் பஸ்கள் 9,103, உதிரி பஸ்கள் 1,361 என மொத்த பஸ்களான 10,464 பஸ்களில் 4,446 பஸ்கள் நேற்று ஒரு நாள் மட்டும் சென்னையில் இருந்து பொங்கலுக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஒரு நாளில் அதிகபட்சம் இவ்வளவு பஸ்கள் தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

    பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு பண்டிகைக்கு முன் உள்ள மூன்று நாட்களில் நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை பயணிகள் பயணிப்பார்கள்.

    இந்த வருடம் பொங்கல் திருநாளுக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4.34 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே நேற்றைய நாளில் (13-ந்தேதி) தங்கள் ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது.

    மொத்தமாக 1,44,778 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இச்சிறப்புப் பஸ்கள் இயக்கத்தை கண்காணித்திட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


    இந்தப் பண்டிகை சிறப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, முதலமைச்சரின் உத்தரவின் பேரில், எனது தலைமையிலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும், காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் கழகங்கள் சார்பிலும், பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளை கொண்டாடிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    மேலும், கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பார்வையிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் புதியதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தை பார்வையிட்டு, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து அறிவுரை வழங்கினார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • அப்போது அவர், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். பிரதமர் மோடி பேசியதாவது:

    விளைவித்த நெல்மணிகளை பொங்கலின் போது இறைவனுக்கு படைப்பது பாரம்பரியமானது. நமது ஒவ்வொரு பண்டிகைகளும் விவசாயிகளுடன் தொடர்புடையவை. தமிழ் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் மறைந்துள்ளது. பல புள்ளிகள் இணைந்து கோலமாவது போல் பல தரப்பினர் இணைந்தால் நாடு அழகாகிறது.

    பலதரப்பட்ட மக்களை இணைக்கும் பணியைத் தான் காசி தமிழ்ச்சங்கம் செய்கின்றது. சிறுதானியங்களை கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இளைஞர்கள் உருவாக்குகின்றனர்.

    2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை பிரதமர் மோடி தனது பேச்சின் இடையே மேற்கோள் காட்டினார்.

    • தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான பிரமாண்டமாக வண்ணக் கோலம் போடப்பட்டிருந்தது.
    • தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    புதுடெல்லி:

    தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    அந்த வகையில் தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

    பொங்கல் விழாவையொட்டி மத்திய மந்திரி எல்.முருகன் வீடு கிராமத்தை போல் களை கட்டி இருந்தது. சுற்றிலும் கரும்பு, மஞ்சள், வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

    கிராமத்து குடிசை வீட்டை தத்ரூபமாக அமைத்து இருந்தனர். வீட்டின் முன் பசு மாடு கட்டப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு காளையும் கட்டப்பட்டு இருந்தது.

    தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான பிரமாண்டமாக வண்ணக்கோலம் போடப்பட்டிருந்தது.

    வீட்டு வாசலில் புதிய மண்பானையில் மத்திய மந்திரி எல்.முருகனும் அவரது மனைவியும் பொங்கல் வைத்தனர். பொங்கல் பானை பொங்கியதும் பெண்கள் குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குரல் எழுப்பினார்கள்.


    தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்த கலை நிகழ்ச்சிகளில் கை தேர்ந்த கலைஞர்கள் தங்களது திறமையை காட்டி கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனை பிரதமர் மோடி மிகுந்த ஆர்வத்தோடு கண்டு ரசித்தார்.

    பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றார். இந்த பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு மத்திய மந்திரி எல்.முருகன், தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

    இதனை ஏற்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ், ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணி, தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், நடிகை மீனா மற்றும் தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

    டெல்லியில் கடந்த ஆண்டும் மத்திய மந்திரி எல்.முருகன், வீட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. அந்த விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார்.

    2-வது ஆண்டாக இன்று நடைபெற்ற பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
    • பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர், காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் (சிறப்பு நிலைய அலுவலர்), முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி (சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து), இயந்திர கம்மியர் ஒட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னனி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 119 அலுவலர்களுக்கும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண் மற்றும் பெண்) நிலைகளில் 59 பேர்களுக்கும் "தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்" வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

    மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/- 2024. பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.

    மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

    இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

    • கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    குறிப்பாக தைப் பொங்கல் திருநாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்து பொங்கல் திருநாளை கொண்டாடுவது பெரும்பாலான இந்துக்களிடம் பழக்கமாக உள்ளது.

    அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி முருகப் பெருமானை தரிசிக்க கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களில் திருச்செந்தூர் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் நாளை ( திங்கட்கிழமை) பொங்கலன்று முருகப்பெருமானை தரிசிப்பதற்காக திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் காணப்பட்டது.

    கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும், பல சிறுவர்கள் ஆண்டி கோலமிட்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை (15-ந் தேதி) தை 1-ந் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    • 3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    ஓசூர்:

    தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, இன்று போகியுடன் தொடங்கியது. வருகிற புதன்கிழமை (17-ந் தேதி) வரை பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால், கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் ஓசூர் வழியாக தமிழகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர்.

    ஒரே நேரத்தில் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி வழியாக தமிழகத்திற்கு கடந்த 2 நாட்களாக கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் படையெடுத்ததால், ஓசூர் அருகே தமிழக - கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடி முதல் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதி வரை 3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    போக்குவரத்து நெரிசலால், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலை நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், ஓசூர் நகர பகுதிகளிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

    • பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டன.
    • கடந்த 2 நாளில் பேருந்து, ரெயில், விமானம் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று முன்தினம் 1.95 லட்சம் பேர் பயணித்தனர். நேற்று 1,071 வழக்கமான பேருந்துகள், 658 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த 50 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் என மொத்தமாக 5 லட்சம் பேர் பேருந்துகளில் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

    மேலும் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில்நிலையங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட ரெயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 2 நாட்களில் பேருந்து, ரெயில், விமானங்கள் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

    • கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன்.
    • அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,

    உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. இது உழைப்பின் மேன்மையைப் போற்றும் திருநாள். உழுது விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கிப் பொங்கல் வைத்து, அந்த விளைச்சலுக்குக் காரணமான இயற்கை ஆற்றலாம் சூரியனுக்கும், உழவுக்குத் துணையாய் இருந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துகிற நன்னாள்! சாதி - மத பேதமற்ற சமத்துவத் திருநாள்! ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் ஏதுமின்றி, திராவிடர்களாம் தமிழர்களின் தனிச் சிறப்புமிக்க தொன்மைமிகு பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்திருப்பது தை முதல் நாளாம் பொங்கல் திருநாள்!

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இழந்துவிடாத வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு எதிர்கொண்ட மிச்சாங் மழை - வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது.

    கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் அவர்களிடம் புதுடெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு. வணிகர்களுக்கான கடன் வழங்கும் முகாம்கள், முக்கியமான சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கும் முகாம்கள், நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான மருத்துவ முகாகம்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுள்ளன.

    முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், என்னை முதலமைச்சராக்கிட அயராது உழைத்த அன்பு உடன்பிறப்புகளாம் தி.மு.கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள். கழகத்தினரின் இத்தகைய செயல்வேகம் குறித்த செய்திகள்தான் என்னுடைய பணிக்கு ஊக்கம் தரக்கூடியவை. மக்களுக்கான பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள உத்வேகம் அளிப்பவை.

    நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிடும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அந்த எதிர்பார்ப்பு இன்றளவும் மக்களிடம் இருப்பதை உங்களில் ஒருவனான நான் அறிவேன். அதனால்தான் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று திராவிட மாடல் அரசு அறிவித்தது. அத்துடன், ரொக்கத் தொகையும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தை நான் அறிந்தேன்.

    கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன். சர்க்கரை நாவில் இனிக்கும். ரொக்கப் பணம் மனதில் இனிக்கும் என்பதால் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் கூடுதல் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில் 2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

    ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசுத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,436.19 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளும் வேட்டிகளும் ஏழை - எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகள் மூலம் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு முன்பே வழங்கப்படுகின்றன. 

    இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10-ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது நமது திராவிட மாடல் அரசு.

    எத்தனை நெருக்கடிகள் சூழ்ந்தாலும், நம் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கும் அரசாக கழக அரசு தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 6 இலட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீட்டினைத் தமிழ்நாடு பெறக்கூடிய வாய்ப்பும், அதன் வாயிலாக 26 இலட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு அமையக்கூடிய சூழலும் உருவாகியுள்ளது. சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இந்த முதலீடுகள் மூலமாக தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் அமைக்கப்படவிருப்பதால் பரந்துபட்ட வளர்ச்சியை நோக்கிய பாய்ச்சலைக் காணவிருக்கிறது நமது மாநிலம்.

    பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடுபட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. நமது அரசின் இந்த முயற்சிகளை சென்னையில் ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கேற்ற உலகத் தமிழர்கள் பலரும் பாராட்டியதுடன், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் உறுதியளித்துள்ளனர்.

    நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம். மற்ற மாநிலங்களின் தேர்தல் களங்களில் திராவிட மாடல் அரசின் திட்டங்களே வாக்குறுதிகளாக அளிக்கப்படுகின்றன.

    'எல்லாருக்கும் எல்லாம்' என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படைக் கோட்பாடு. 'நான்தான் எல்லாம்' என்கிற போக்கில் செயல்படுகிற ஆட்சியதிகாரம் ஜனநாயகத்திற்குச் சீர்கேடு. அத்தகைய சீர்கேட்டை அகற்றி, ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒன்றிய அரசு 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கக்கூடிய, மதநல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய, மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.

    தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.

    எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். உழைக்கிறேன்... உழைக்கிறேன்... உழைக்கிறேன்…

    ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு இளைஞரணிச் செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியே, "எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்" என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.

    இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.

    கழகத் தலைவர் என்கிற பொறுப்பு உங்களில் ஒருவனாகிய எனக்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒப்புதலுடன், பொதுக்குழுவின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு. முதலமைச்சர் என்கிற பொறுப்பு உடன்பிறப்புகளின் அயராத உழைப்பிலும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும் கிடைத்தது ஆகும். நம்பிக்கை வைத்து பொறுப்பினை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது. தலைவர் என்ற உரிமையோடும் அன்போடும் கட்டளையிடுவது, திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.

    எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.

    குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் - மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.

    கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.

    பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு! தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய ஒன்றிய அரசில் சமூகநீதி – சமதர்ம - மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம்.

    உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய பொங்கல் - தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

    ×